அசாம் அமைச்சரவை விரிவாக்கம்; 12 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

கவுஹாத்தி: அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 12 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். கவுஹாத்தியில் உள்ள ஜோதி -விஷ்ணு சர்வதேச கலா மந்தீர் வளாகத்தில் நடந்த விழாவில், ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா எம்எல்ஏக்களுக்கு அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர்களாக பதவியேற்ற 11 பேர் பாஜ எம்எல்ஏக்கள் ஆவர்.

மேலும் ஒருவர் ஏஜிபியை சேர்ந்தவர். இந்த விரிவாக்கத்தின் மூலமாக அசாம் அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கையானது 17ஆக உயர்ந்துள்ளது. ஹிமந்த பிஸ்வா சர்மாவின் முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஏஜிபியை சேர்ந்த மஹந்தா புதிய அமைச்சரவையிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர், ஒன்றிய அமைச்சர்கள் சர்பானந்த சோனோவால், பவித்ரா மார்கரிட்டா, அசாம் சபாநாயகர் ரஞ்சித் குமார் தாஸ், பாஜ மாநில தலைவர் திலீப் சைகியா மற்றும் என்டிஏ எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
126 உறுப்பினர்களை கொண்ட அசாம் சட்டப்பேரவையின் மாநில அமைச்சரவையின் அதிகபட்ச பலம் 19 ஆகும்.

Related Stories: