திருப்பூர் குமரன் பேருந்து நிலைய பொது கழிப்பிடத்தில் தூய்மை பணியாளரை கையுறை இன்றி மனிதக்கழிவை அள்ள வைத்த அவலம்: மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து தர்ணா

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆதித்தமிழர் பேரவையின் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி 3வது மண்டலத்திற்கு உட்பட்ட 60வது வார்டுக்குட்பட்ட கோவில்வழி குமரன் பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பிடம் உள்ளது. கடந்த 1ம் தேதி காலை இங்கு தூய்மை பணியாளர் சந்திரன் என்பவரை கையுறை, முகக்கவசம் எதுவும் இல்லாமல் மனித கழிவை கையால் அள்ளும்படி சூபர்வைசர் கோபால் ஈடுபடுத்தியுள்ளார்.

அரசால் முற்றிலும் தடை செய்யப்பட்ட மனித உரிமைக்கும், கண்ணியத்திற்கும் எதிரான செயல் இதுவாகும். எனவே, சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன், சூபர்வைசர் கோபால் ஆகியோர் மீது பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர். இதுகுறித்து பாதிப்பட்ட தூய்மை பணியாளர் சந்திரன் கூறியதாவது: குமரன் பஸ் நிலையத்திற்கு முன்பு உள்ள பொது கழிப்பிடத்தில் மனிதக்கழிவுகளை வெறும் கைகளால் அள்ளுமாறு மேஸ்திரி கோபால் என்பவர் வற்புறுத்தி வருகிறார்.

இதுகுறித்து ஆய்வாளரிடம் முறையிட்டபோது விரைவில் சரிசெய்து தருகிறேன், அதுவரை சுத்தம் செய் என்று கூறி மழுப்புகிறார். இந்த சுகாதாரமற்ற வேலையை செய்ய மறுத்தால், பணிக்கு வந்திருந்தாலும் ஆப்சென்ட் போட்டு விடுவதாக மிரட்டுகிறார்.வெறும் கைகளால் மலத்தை அள்ளுவதால் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். எனது உளைச்சலுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: