தஞ்சாவூர், ஜூன் 3: தஞ்சை கலெக்டர் ரேவதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 12.8.2025 அன்று முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 1183 நியாய விலைக் கடைகளைச் சேர்ந்த 49,901 குடும்ப அட்டைகளில் உள்ள 75,706 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அடுத்து வரும் ஜூன் 2026ஆம் மாதத்தில் 2.6.2026 மற்றும் 3.6.2026 ஆகிய தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று குடிமைப்பொருட்களை விநியோகம் செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் முதலமைச்சர் தாயுமானவர் திட்டம் மூலம் இல்லம் தேடி குடிமைப் பொருட்கள் 2.6.2026 மற்றும் 3.6.2026 ஆகிய தேதிகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது.
இந்த இரண்டு தினங்களில் பயனாளிகள் குடிமைப் பொருட்களை அவர்களின் இல்லங்களிலேயே பெற்றுக் கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
