துறையூர், ஜூன் 2: திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள கண்காணிப்பட்டியைச் சேர்ந்தவர் சுக்கிரன் மனைவி பழனியம்மாள்(76). சுக்கிரன் பல ஆண்டுகளுக்கு முன்பு விட்டு சென்று விட்டாராம். இவரது மகன் ராஜகோபாலுடன்(55) பழனியம்மாள் வசித்து வந்தாராம். மே 31ம் தேதி வீட்டை விட்டுச் சென்றவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லையால். பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லையாம். இந்நிலையில் எரகுடியில் வாரி அருகேயுள்ள புங்க மரத்தில் சேலையில் தூக்கிட்டு ஒரு மூதாட்டி சடலமாக தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உப்பிலியபுரம் போலீசார் நேரில் சென்று சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் அந்த பெண் மாயமான பழனியம்மாள் என தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக உப்பிலியபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். மாயமான மூதாட்டி தனது சேலையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
