திண்டுக்கல், ஜூன் 2: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவசக்தி (27) என்பவர் தனது ஐந்து குழந்தைகளுடன் வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் சமரசம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட வைத்தனர். தொடர்ந்து அவரை கலெக்டரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனர். இதுகுறித்து சிவசக்தி தெரிவித்ததாவது: வடமதுரை அருகே பூசாரிபட்டியில் குடியிருந்து வருகிறோம். எனது கணவர் இரும்பு வேலை செய்து வருகிறார்.
எங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனக்கு இரட்டை குழந்தைகள் உள்பட ஐந்து குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் தினமும் மதுபோதையில் என்னையும், குழந்தைகளையும் அடித்து துன்புறுத்துகிறார். மேலும், குழந்தைகளுக்கு பால், அரிசி போன்றவை வாங்கி தராமலும், மீறி வாங்கினாலும் அதனை தரையில் போட்டு கொட்டியும், தன்னையும் குழந்தைகளையும், போதையில் கொலை செய்ய முற்பட்டு கொடுமைப்படுத்தி வருகிறார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தும் பேச்சுவார்த்தை மூலம் அனுப்பி வைக்கின்றனர்.
எனவே, கலெக்டர் இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
