நெல்லை: தேவேந்திரகுல எழுச்சி இயக்க தலைவர் கண்ணபிரானை தச்சநல்லூர் போலீசார் மீண்டும் கைது செய்தனர். தச்சநல்லூர் போலீஸ் நிலையம் மற்றும் தாழையூத்து பகுதிகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட வழக்கில் தேவேந்திரகுல எழுச்சி இயக்க தலைவர் கண்ணபிரானை போலீசார் சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர். அந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை தொடர்ந்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
இந்நிலையில் மானூர் மற்றும் அம்பாசமுத்திரம் பகுதிகளில் நடந்த அரிவாள் வெட்டு சம்பவங்களை குறிப்பிட்டு கண்ணபிரான் சமூக வலைதளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்த பதிவு மக்கள் மத்தியில் வன்முறையை தூண்டும் விதமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் அவர் மீது புதிய வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து கண்ணபிரானை போலீசார் நேற்று மீண்டும் கைது செய்தனர். இதனால் காவல் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
