திருத்தணி, ஜூலை 27: திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1984-87ம் கல்வி ஆண்டுகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகள் படித்த தெலுங்கு மொழி முன்னாள் மாணவ, மாணவியர் பள்ளி கல்வி முடிந்து பிரிந்து சென்றனர். அவர்களில் பலர் சுய தொழில், ஒன்றிய, மாநில அரசு பதவிகளில் வெளி நாடுகளில் பணியாற்றி ஓய்வு பெற்றனர். இந்நிலையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒழுக்கம் கல்வி கற்பித்த பள்ளி ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற வேண்டும் என்று முடிவு செய்து பல்வேறு பகுதிகளில் குடும்பங்களுடன் வசித்து வரும் முன்னாள் மாணவர்களை மூன்று மாதங்களாக 40 பேர் ஒருங்கிணைத்தனர். கனகம்மாசத்திரம் அரசுப் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிநாடு மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் 60 ஆண்டுகள் நிறைந்த முன்னாள் மாணவ, மாணவியர் வருகை தந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்களின் ஆசிரியர்களை முன்னாள் மாணவ, மாணவியர் அறிமுகப்படுத்திக் கொண்டு பாத பூஜை செய்து ஆசி பெற்று நினைவு பரிசு வழங்கினர். படித்த பள்ளிக்கு அடுக்குமாடி வகுப்புகளுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில் இரும்பு கிரில் வழங்கினர். ஆண்டுதோறும் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் மற்றும் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி ஊக்கப்படுத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். காலை முதல் மாலை வரை நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ, மாணவியர் அவர்களின் ஆசிரியர்களுடன் வகுப்பறை நினைவுகள் பகிர்ந்து மகிழ்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
