ஓசூர் அருகே மகனை கொன்ற தந்தை கைது

ஓசூர், மார்ச் 4: ஓசூர் அருகே மகனை அடித்துக்கொன்ற தந்தையை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே காரப்பள்ளியை சேர்ந்தவர் ஜெயப்பா (68). கூலி தொழிலாளி. இவருக்கு 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் பசவராஜ் (34), பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 மாத பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், ஜெயப்பா மது குடித்துவிட்டு வந்து, வீட்டில் உள்ளவர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம், குடித்துவிட்டு வந்து மகன் பசவராஜிடம் வாய்தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றவே இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த ஜெயப்பா அருகில் கிடந்த கம்பியை எடுத்து பசவராஜின் பின் மண்டையில் பயங்கரமாக தாக்கினார். இதில், பலத்த அடிபட்டு சரிந்த பசவராஜை அக்கம், பக்கத்தினர் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வீட்டில் இருந்த ஜெயப்பாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரை காவல்நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 2வது நாளாக நேற்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: