விசிக அமைச்சரவையில் இடம் பெற அழைப்பு; முன்னணி பொறுப்பாளர்களுடன் ஆலோசித்து முடிவு: திருமாவளவன் பேட்டி

சென்னை: பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த நாளை முன்னிட்டு விசிக தலைவர் திருமாவளவன் சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற அழைப்புக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். எங்கள் கட்சி உயர்நிலை கூட்டம் கடந்த 8ம் தேதி ஆன்லைன் வழியாக நடைபெற்றது. அப்போது நிர்வாகிகள் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என முன்மொழிந்தார்கள்.

இருப்பினும் தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகிறோம் என அவர்கள் உறுதியை கொடுத்தார்கள். அதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டு ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினோம். முதல்வர் விஜய் வேளச்சேரி இல்லத்திற்கு வருகை தந்த போது தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். அதனைத் தற்போது ஆதவ் அர்ஜுனா வெளிப்படையாக வழிமொழிந்து இருக்கிறார். இது குறித்து முன்னணி பொறுப்பாளர்கள் உடன் கலந்து ஆலோசனை மேற்கொண்ட பிறகு எங்கள் முடிவை அறிவிப்போம்.

தவெக கூட்டணியில் இணைந்து நாங்கள் தேர்தலை சந்திக்கவில்லை, நாங்கள் திமுக கூட்டணியில் இடம்பெற்று அதில் 2 இடங்களில் வெற்றிபெற்றோம். தவெக ஆட்சி அமைக்க 2 இடங்கள் தேவை என்ற நிலை இருந்ததால் நாங்கள் எங்கள் ஆதரவை வழங்கினோம். தற்போது வெளிப்படையாக விசிக, ஐயூஎம் எல் கட்சி அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எனவே அவர்களது அழைப்பை நாங்கள் மதிக்கிறோம், நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். இதற்காக மீண்டும் விசிக உயர்நிலை கூட்டம் கூட்ட வேண்டிய தேவை இல்லை, பொதுச் செயலாளர், பொருளாளர், முதன்மை செயலாளர் ஆகிய முன்னணி பொறுப்பாளர்கள் உடன் இந்த அழைப்பு குறித்து கலந்து பேசி முடிவை அறிவிக்க இருக்கிறோம். வெளிப்படையாக அழைப்பு வந்துள்ளதால் இந்த முன்னணி பொறுப்பாளர்கள் உடன் கலந்து பேசுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: