ஈரோடு, மே 15: ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் இந்திய தொழிற்சங்க மையம் மற்றும் சிஐடியு சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாரப்பன் தலைமை தாங்கினார். வடமாநிலங்களில் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு எதிராக அரசின் அடக்கு முறை, தொழிலாளர்கள் மீதான தாக்குதல், பொய் வழக்கு, சிறை தண்டனை வழங்கியது ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும். கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள், செயற்பாட்டாளர்களை உடனடியாக நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும். தொழிலாளர் விரோத தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம ஊதியம், நலன்களை நிரந்தர பணிகளில் உள்ளதுபோல வழங்க வேண்டும். சமையல் காஸ் சிலிண்டர்களை மலிவு விலையில் வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு நிர்வாகிகள் சுப்பிரமணியம், ராம், சுந்தரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
