கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும்; பருவநிலை மாற்றத்தால் டெங்கு அபாயம்: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

 

சென்னை: தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், கொசு உற்பத்தியை தடுக்க அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பே கடந்த ஏப்ரல் முதல் வாரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து நாளுக்குநாள் வெயில் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 4ம் தேதி கத்திரி வெயில் காலம் தொடங்கியதால், இந்த நிலை இன்னும் மோசமானது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து மக்கள் மகிழ்ச்சிடைந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த வாரம் பெய்த மழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வானிலை மாற்றங்கள், டெங்கு கொசு உற்பத்தியை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அதீத வெப்பநிலை, சீரற்ற மழைப்பொழிவு மற்றும் அசாதாரண வானிலை மாற்றங்கள் ஆகியவை ஏடிஸ் வகை கொசுக்களின் பெருக்கத்துக்கு உகந்த சூழலை உருவாக்குகின்றன. இதனால் டெங்கு காய்ச்சல் பரவல் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், பொது சுகாதாரத் துறை மாவட்ட நிர்வாகங்களுக்கு விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதில், தமிழகத்தில் நகர்ப்புறங்களில் உள்ள தேங்கிய நீர், குப்பை மற்றும் சுகாதாரமற்ற சூழல்கள் கொசுகள் உருவாக இடமளிக்கிறது.

அதனால் வீடுகள், தொழில்நிறுவனங்கள், கட்டுமான தளங்கள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் கொசு உற்பத்திக்கு இடமளிக்காமல் பராமரிப்பது மிக முக்கியம். தண்ணீர் தொட்டிகள், குளிர்பதன பெட்டிகள், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றில் தேங்கும் நீரை வாரம் ஒருமுறை காலி செய்து சுத்தப்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதார துறையின் ஒருங்கிணைந்த முயற்சியால் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் பாதிப்பு விகிதமும் இறப்பு எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தது. இதை தக்கவைக்கவும், மேலும் குறைக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்: தமிழகத்தில் பெய்த மழை காரணமாக தண்ணீர் தேங்கி டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் உற்பத்திக்கு வழிவகுக்கின்றன. வழக்கமாக உள்ள கண்காணிப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் சவாலை அளிக்கும் வகையில் இந்தக் காரணிகள் அமைந்துள்ளன. டெங்கு பாதிப்புகள் குறித்த தகவல்களை சுகாதார இணையப் பக்கத்தில் உடனுக்குடன் பதிவேற்ற வேண்டும். இதனால் நிகழ்நேர தரவுகள் கிடைத்து, பரவலை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் தீவிரமாக இருந்தது. உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறையின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் காரணமாக கடந்த ஆண்டு பாதிப்பு விகிதமும், இறப்பு எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்தது.

நோய் பரப்பும் பூச்சிகள், கொசுக்களைக் கண்காணித்து அவற்றின் உற்பத்தியை குறைக்க நடவடிக்கை எடுப்பது முக்கியம். அரசு மருத்துவமனைகளில் டெங்கு பரிசோதனைகளை கட்டணமில்லாமல் மேற்கொள்வதற்கான கட்டமைப்பு தயார் நிலையில் இருத்தல் வேண்டும். குறிப்பாக பரிசோதனை உபகரணங்கள் போதிய எண்ணிக்கையில் இருப்பு வைத்திருக்க வேண்டும். கொசு உற்பத்திக்கு இடமளிக்காத வகையில் வீடுகள், தொழில்நிறுவன வளாகங்களைப் பராமரிப்பது முக்கியம். நோய் சார்ந்த சூழல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: