தவெகவை மக்கள் முன்னால் முழுமையாக அம்பலப்படுத்துவோம்: அமமுக தலைவர் டிடிவி தினகரன்

சென்னை: த.வெ.க.வின் தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தைக் காக்க, அவர்களை மக்கள் முன்னால் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துவோம் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “தூயசக்தி என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த த.வெ.க., ஜனநாயக மாண்புகளை மீறி குதிரை பேரம் நடத்தி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கிய துர்நாற்ற அரசியலை நான் பொதுவெளியில் அம்பலப்படுத்தி இருந்தேன்.

த.வெ.க.வின் இந்த அவமானகரமான செயலை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில், சட்டப்பேரவையிலேயே இதுபற்றி விரிவாகப் பேசி இந்த அரசின் குதிரைபேர, மோசடி அரசியலை மேலும் அம்பலப்படுத்தி, கண்டித்த மதிப்பிற்குரிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும், தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதாவிற்க்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல, தங்கள் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க.வினர் செய்த அசிங்க அரசியலைக் கண்டித்துக் குரல் கொடுத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

த.வெ.க.வின் இந்த தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தைக் காக்க, அவர்களை மக்கள் முன்னால் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories: