விளந்தை மேல அகத்தீஸ்வரர் கோயிலில் அப்பர் குருபூஜை விழா

ஜெயங்கொண்டம், மே 12: விளந்தை மேல அகத்தீஸ்வரர் கோயிலில் அப்பர் குருபூஜை விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் – விளந்தையில் அறம் வளர்த்த நாயகி உடனுறை மேலஅகத்தீஸ்வரர் கோயிலில் நால்வர்களான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகியோருக்கு குருபூஜை விழா பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அப்பர் சுவாமிக்கு குரு பூஜை விழா நடைபெற்றது.

இதில் மேல அகத்தீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி, பிள்ளையார், முருகன், அகஸ்தியரை, தொடர்ந்து நாயன்மார்களில் நால்வர்களான அப்பர், திருஞானசம்பந்தர், மணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி நாயன்மார்களுக்கு, மஞ்சள், பன்னீர், உள்ளிட்ட 16 வகையான வாசைனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் ஆகிய பாடல்களை பாடி குரு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் பாடல்களை பாடியவாறு கோயிலை சுற்றி வலம் வந்தனர்.

அதனை தொடர்ந்து சக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பாக 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் விளக்குகள் வைத்து பூக்களால் அர்ச்சனை செய்து, தேங்காய், பழம் வைத்து குடும்ப நலம், மழை பெய்ய வேண்டியும், பிரார்த்தனை செய்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில் ஆண்டிமடம்-விளந்தை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Related Stories: