குன்றத்தூர், மே 12: அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (56). இவரது மகன் வினோத்குமார் (25). இருவரும் பெயின்டிங் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் ரவிக்குமார் வேலைக்கு செல்வதற்காக பெரம்பூர் ராஜிவ்காந்தி நகர் பகுதி அருகே சென்றபோது, அங்கு வந்த ஒருவர் ரவிக்குமாரிடம் தகராறு செய்துள்ளார்.அப்போது வினோத்குமார் அங்கு வந்த நிலையில், ‘எனது தந்தையிடம் ஏன் வீண் தகராறு செய்கிறாய்’ என அந்த நபரை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தந்தை, மகன் இருவரையும் தகாத வார்த்தைகளால் பேசியதோடு, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வினோத்குமார், ரவிக்குமார் ஆகிய இருவரையும் வெட்டிவிட்டு, கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இதில் தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயமடைந்த வினோத்குமாரும், ரவிக்குமாரும் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். ரவிக்குமார், மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே தகவலறிந்து வந்த ஐ.சி.எப் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்; இதில், தந்தை, மகனை வெட்டியது பெரம்பூரைச் சேர்ந்த நாகராஜ் (32) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
