இளநிலை பட்டப் படிப்புகளுக்கான ‘கியூட்’ நுழைவுத்தேர்வு தொடங்கியது: முதல் நாளில் 1.24 லட்சம் பேர் பங்கேற்பு

 

 

 

சென்னை: இளநிலை பட்டப் படிப்புகளுக்கான ‘கியூட்’ நுழைவுத்தேர்வு நேற்று தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர கியூட் எனப்படும் பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை ஒன்றிய அரசு சார்பில் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.அந்த வகையில் 2026-27ம் கல்வி ஆண்டு சேர்க்கைக்கான இளநிலை பட்டப்படிப்பு கியூட் நுழைவுத்தேர்வு மே 11 முதல் 31 வரை நடைபெறும் என என்டிஏ அறிவித்தது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜனவரி 3ல் தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி முடிவடைந்தது. இத்தேர்வுக்கு 15 லட்சத்து 68 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.

அவர்களுக்கான ஹால்டிக்கெட் மே 7ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி கியூட்தேர்வு நேற்று தொடங்கியது. கணினிவழியில் நடத்தப்படும் இத்தேர்வை சென்னை உள்பட இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் மட்டுமின்றி ஷார்ஜா, அபுதாபி, ரியாத், குவைத், மஸ்கட், சிங்கப்பூர், கோலாலம்பூர் உள்ட 14 சர்வதேச நகரங்களிலும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இத்தேர்வு மே 31ம் தேதி முடிவடைகிறது.

 

Related Stories: