முதல்வராகியுள்ள விஜய்க்கு கட்டாயம் அவருக்கான கால அவகாசத்தை தருவோம் – பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: தமிழகத்தின் புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விருத்தாச்சலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், விஜய் தற்போது தான் முதல்வராக பொறுப்பேற்று கொண்டு உள்ளார், அவருக்குக் கொஞ்சம் காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். வெக ஆட்சிக்குத் தங்களது ஆதரவு இருக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய பிரேமலதா, தாங்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணியில் நின்று வெற்றி பெற்றுள்ளதால் திமுகவிற்கு ஆதரவாகவே செயல்படுவதில் உறுதியாக இருப்பதாக தெளிவுபடுத்தினார்.

முதல்வராக பதவியேற்றிருக்கும் தம்பி விஜய்க்கு கேப்டன் சார்பாக, தேமுதிக சார்பாக வாழ்த்துகள். நேற்று தானே பதவியேற்றிருக்கிறார். கட்டாயம் அவருக்கான நேரத்தை நாம் தருவோம். அண்ணன் ஸ்டாலினும் அதை தான் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு மக்கள் பிரச்னைகளை, தமிழ்நாட்டின் பிரச்னைகளைப் பற்றி பேசுவோம். தமிழகத்திற்காகவும் தமிழக மக்களுக்காகவும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம். வரும் நாள்களில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பதை பார்த்து அதற்கேற்ப எங்களது செயல்பாடுகள் இருக்கும் என்றார். தவெக தலைவர் விஜய் நல்லபடியாக ஆட்சி செய்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். தமிழகத்தின் 17-ஆவது சட்டமன்ற தொடக்க விழாவில், விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து முதன்முறையாக எம்எல்ஏ-வாகத் தேர்வாகி உள்ள பிரேமலதா விஜயகாந்த் பதவியேற்றுக் கொண்டார். அப்போது அவையில் இருந்த விஜய் முன்னிலையில் அவர் பொறுப்பேற்றபோது, விஜய் எழுந்து நின்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: