கொழுப்புச்சத்தும் மாரடைப்பும்!

நன்றி குங்குமம் டாக்டர்

பலவிதமான பொருள்கள் சேர்ந்துதான் நம்மை உருவாக்கி இருக்கின்றன. அதில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளாக விளங்குவது கொழுப்பு. இதனை, ஆங்கிலத்தில் கொலஸ்ட்ரால் என்று சொல்வர். நம்முடைய ரீவர்ஸ் எனர்ஜியாக கொழுப்பு செயல்படுகிறது. ஒரு காரியத்தை நாம் செய்கிறபோது, நமக்குத் தேவையான சக்தி அதிலிருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே, அளவான கொழுப்புச்சத்து நம் உடம்பிலே இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

மாரடைப்பு ஏற்பட்டுவிடுமே என்கிற பயத்தினால், உடம்பிலே கொழுப்பே சேரக்கூடாது என்று பலபேர் நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது. அறிவுபூர்வமான எண்ணமல்ல, அதேசமயத்தில், அளவுக்கு மீறிய கொழுப்பு சேர்ந்தால், மாரடைப்பு என்னும் பேராபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.நம் உடலில் இருக்க வேண்டிய கொழுப்பின் அளவை எப்படி உணர்ந்து கொள்வது. இதைப்பற்றி நன்கு ஆய்வு செய்த நிபுணர் குழுவினர் இப்படிச் சொல்கிறார்கள். கடுமையாக வியர்வை சிந்தப்பாடுபடுகிற உழைப்பாளி வர்க்கத்துக்குக் கொழுப்பு மிகமிக அவசியம் என்று.

இரண்டு விளையாட்டு வீரர்களை கொண்டு செய்த ஆய்வில், அவர்களுக்குக் கிடைக்கும் கலோரியின் அளவு, 17.5 முதல் 17.6 சதவிகிதம் வரை புரதச்சத்தின் மூலமும், 44 சதவிகிதத்துக்கு மேலாகக் கொழுப்புச் சத்திலிருந்தும். 34 சதவிகிதம் மாவுப் பொருளிலிருந்தும் பெறப்படுகிறது என்பது தெரிய வருகிறது. எனவே, உழைப்பதற்குத் தேவையான சக்தியில் பெரும்பாலான அளவு கொழுப்பிலிருந்துதான் கிடைக்கிறது.அதே சமயத்தில், கொழுப்புச்சத்து அளவுக்கு மீறிப் போகிறபோது, அந்தக் கொழுப்பு உயிருக்கு ஆபத்தாக மாறிவிடுகிறது.

உதாரணமாக, கொழுப்பின் அளவு 182 202 வரை போகிறபோது, 29 சதவிகிதம் மாரடைப்பு மரணம் ஏற்படுகிறது. இந்த அளவு 203 – 220 வரையில் போகிறபோது 73 சதவிகிதம் மாரடைப்பினால் ஏற்படும் மரணத்திற்கு வாய்ப்பு இருக்கிறது. 221 – 244 வரை கொழுப்பு கூடுகிறபோது, மாரடைப்பு வாய்ப்பு 121 சதவிகிதமாக உயருகிறது. ஆக, கொழுப்புச் சத்துக்கும் மாரடைப்புக்கும் இடையே இருக்கிற பிணைப்பு இவ்வாறு ஆய்வுபூர்வமாக, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

உடனே, பலரும் மாரடைப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகக் கொழுப்புச்சத்தை அறவே சாப்பிடாமல் விட்டுவிட்டால் என்ன என்று நினைக்கத் தொடங்கி விடுகிறார்கள். கொழுப்புச்சத்து அற்ற உணவை மட்டுமே சாப்பிடுவதிலும், ஒரு சிக்கல் இருக்கிறது. அப்படிச் சாப்பிடும்போது, ரத்தக் குழாயில் ரத்தப் படிமங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவம் சொல்கிறது. எனவே, ஓரேயடியாகக் கொழுப்புச்சத்து இல்லாமலும் ஒருவர் இருந்துவிட முடியாது. எனவே, கொழுப்புச்சத்து அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் இருப்பதுதான் ஆரோக்கியத்தை காக்க வழிவகுக்கும்.

தொகுப்பு: – ரிஷி

Related Stories: