அகமதாபாத்: பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற நாராயண் சாயின் கருணை மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் வசித்து வந்த பெண் ஒருவர், கடந்த 2013ம் ஆண்டில் ஆன்மீக குரு ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் (54) மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பல ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், நாராயண் சாய் மீதான குற்றச்சாட்டுகள் 100 சதவீதம் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் அவர் தரப்பில் பல்வேறு சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், குஜராத் உயர் நீதிமன்றத்தில் நாராயண் சாய் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு மற்றும் தண்டனையை நிறுத்தி வைக்கும் மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பாலியல் பலாத்காரம் போன்ற கடுமையான குற்றங்களில் எவ்வித மெத்தனமும் காட்ட முடியாது என்று கூறி, அவருக்கு எவ்வித சலுகையும் வழங்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
மேலும், அவரது தண்டனையை நிறுத்தி வைக்கவும், ஜாமீன் வழங்கவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு காரணமாக நாராயண் சாய் தொடர்ந்து சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
