புதுடெல்லி: தேசியப் பாடலான வந்தே மாதரத்தை அவமதிப்பவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கும் சட்டத் திருத்தத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடிய ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், தேசிய கீதத்திற்கு இணையான சட்டப் பாதுகாப்பை தேசியப் பாடலுக்கும் (வந்தே மாதரம்) வழங்க அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்தது. இதன்படி, வந்தே மாதரம் பாடப்படும்போது யாராவது வேண்டுமென்றே இடையூறு செய்தாலோ அல்லது அவமதித்தாலோ அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
இந்த புதிய விதியின்படி, 3 நிமிடம் 10 வினாடிகள் ஓடக்கூடிய வந்தே மாதரத்தின் ஆறு சரணங்களும் கட்டாயம் பாடப்பட வேண்டும். அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்திற்கு முன்பாக இப்பாடல் இசைக்கப்படும்போது பொதுமக்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். ஆனால், சினிமா அல்லது ஆவணப்படங்களில் இப்பாடல் வரும்போது பொதுமக்கள் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை. பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டங்களில் இப்பாடலை முழுமையாக இடம்பெறச் செய்யவும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
