ஆட்சி அமைக்க… அடுத்து என்ன நடக்கும்?

தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இதில் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் தவெக 107 இடங்களை பிடித்துள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 54 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற முறையில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்க முயற்சிக்கும். ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 118 எம்எல்ஏக்கள் ஆதரவு வேண்டும்.

தற்போது தவெக 107 எம்எல்ஏக்கள் மட்டுமே பெற்றுள்ளது. இதில் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஆட்சி அமைக்க கூடுதலாக 12 எம்எல்ஏக்கள் ஆதரவு வேண்டும். அதன்படி, திமுக அல்லது அதிமுக கட்சிகளில் உள்ள சிறிய கட்சிகளின் ஆதரவை விஜய் பெற முயற்சி செய்வார். இன்று அல்லது நாளை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது.

இதில் தவெக சட்டமன்ற கட்சியின் தலைவராக விஜய்யை தேர்வு செய்து, அனைத்து எம்எல்ஏக்களும் கையெழுத்திட்டு கடிதம் கொடுப்பார்கள். இந்த கடிதத்தை, விஜய் தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். ஆளுநரும் அதிக இடங்களை பிடித்த கட்சி என்ற அடிப்படையில், விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பதுடன், ஒரு சில நாட்களில் தமிழக சட்டப்பேரவை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிடுவார்.

அதன்படி, குறிப்பிட்ட நாளில் சட்டப்பேரவையில் 118 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதை விஜய் நிரூபிக்க வேண்டும். ஒருவேளை கட்சியின் பெரும்பான்மை ஆதரவு இல்லை என்றால் அவரது ஆட்சி உடனடியாக கவிழும் ஆபத்தும் உள்ளது. இதுபோன்ற சிக்கல்களை விஜய் எப்படி சமாளிக்க உள்ளார் என்பது இன்னும் ஒரு சில தினங்களில் தெரியும்.

Related Stories: