சென்னை: எல்நினோ தன்மை உருவாக வாய்ப்புள்ளதால் இந்தாண்டு தமிழகத்தில் கோடைகாலம் செப்டம்பர் வரை நீடிக்கும் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அண்மையில் இங்கிலாந்தில் உள்ள ரெடிங் பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியலாளர்கள், இந்தியா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து, இந்தியாவின் பருவமழை காலத்தில் வரும் “ஈரப்பதத்துடன் கூடிய வெப்ப அலைகள்” எவ்வாறு இயங்குகின்றன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வின் மிகவும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு என்னவெனில், ஈரப்பதத்துடன் கூடிய வெப்பத்தை ஏற்படுத்துவதில் மட்டுமின்றி, இந்தியாவில் அது எங்கே மிகவும் ஆபத்தாக இருக்கும் மற்றும் எப்போது தாக்கும் என்பதை தீர்மானிப்பதிலும் பருவமழையின் பங்கு உள்ளது என கண்டறிந்து அதற்கான எச்சரிக்கை வழங்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னையில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த ஏர் ஷோவில் ஏற்பட்ட மரணம் மற்றும் பொதுமக்கள் மயக்கமடைய காரணம் முழுக்க முழுக்க காற்றில் இருந்த அதிகப்படியான ஈரப்பதம் என இந்த அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை ஆய்வாளர்கள் கூறியதாவது: இந்திய வானிலை ஆய்வு மையம் வழக்கமாக வழங்கும் வெப்பம் குறித்தான எச்சரிக்கைகளில் போதாமை இருக்கிறது.
வெதர் ஸ்டேஷனில் பதிவாகக்கூடிய வெப்பத்திற்கும், மனிதர்கள் உணரக்கூடிய வெப்பத்திற்கும் பெரியளவிலான வித்தியாசம் இருப்பதை இந்த ஆய்வு அறிக்கை விளக்கி உள்ளது. தமிழ்நாடு போன்ற கடலோர மாவட்டங்களில் எப்போதும் ஈரப்பதம் அதிகம் நிலவுகிறது. இதனால் பருவமழையும் ஈரப்பத வெப்ப அலையை அதிகரித்து இந்த ஆய்வுகள் எச்சரிக்கை விடுக்கின்றன.
இதனை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் இந்தாண்டு எல்நினோ (வழக்கத்டை விட அதிகமாக வெப்பமடையும் ஒரு இயற்கை வானிலை நிகழ்வாகும்) தன்மை தமிழகத்தில் உருவாக வாய்ப்புகள் உள்ளதால் இந்த கோடைகாலம் செப்டம்பர் வரை நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, நாம் ஈரப்பத வெப்ப அலையை எதிர்கொள்ள தயாராகி கொள்ள வேண்டும். இவ்வாறு கூறுகின்றனர்.
