துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

சென்னை: துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23ம் தேதி அமைச்சர் சேகர்பாபு தனது அடியாட்களுடன் தன்னை தாக்கினார். வாக்கு எண்ணிக்கை நாளில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்ததையடுத்து ஒரு காவலர் மட்டும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சேகர்பாபுவால் மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளதால் வீட்டிற்கு நிரந்தர பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி எம்.நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் சினோரா அசோக்கிற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Related Stories: