சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளியான ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாங்காக் செல்ல முயன்ற அவரை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து பெங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் பெங்களூர் போலீசார் சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் எம்கேபி நகர் போலீசார் பெங்களூர் விரைந்து சென்று அஸ்வத்தாமனை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி அஸ்வத்தாமன் வெளிநாடு தப்பிச் செல்லா வண்ணம் சென்னை போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அளித்துள்ள நிலையில் நேற்று பெங்களூரில் இருந்து விமானம் மூலம் தாய்லாந்து செல்ல முயன்றபோது கைது செய்யபட்டுள்ளார்.
ஒவ்வொரு திங்கட்கிழமையும் அவர் நீதிமன்றத்தில் கையொப்பமிட வேண்டும். அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை அவர் நீதிமன்றத்தில் கையொப்பம் இட்டுள்ளார். மீண்டும் அடுத்த திங்கட்கிழமை கையொப்பம் இட வேண்டும் அதற்குள் தாய்லாந்து சென்று விட்டு வந்து வடலாம் என அவர் அங்கு செல்ல முயற்சி செய்தாரா அல்லது தப்பித்து செல்ல முயற்சி செய்தாரா என்ற கோணத்தில் எம்கேபி நகர் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
