உபியில் 594 கிமீ நீளமுள்ள கங்கா விரைவுச்சாலையை மோடி திறந்து வைத்தார்

ஹர்தோய்: உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, நிறைவு நாளான நேற்று தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்றார். அங்கு 14 கிமீ பிரமாண்ட ரோடு ஷோ மேற்கொண்ட பிரதமர் மோடி, பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு சிறப்பு பூஜைகளை அவர் மேற்கொண்டார். அப்போது அவருக்கு பாஜ நிர்வாகிகள் திரிசூலம், உடுக்கை வழங்கி வரவேற்றனர். அங்கிருந்து ஹர்தோய் மாவட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி, ரூ.36,230 கோடியில் கட்டப்பட்ட கங்கா 6 வழி விரைவுச் சாலையை திறந்து வைத்தார். இந்த விழாவில் ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

594 கிமீ நீளமுள்ள இந்த சாலை நாட்டின் மிக நீண்ட விரைவுச் சாலை என்பது குறிப்பிடத்தக்கது. இது மீரட், ஹப்பூர், புலந்த்சாகர், அம்ரோகா, சம்பல், பதாயூன், ஷாஜகான்பூர், ஹர்தோய், உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கர் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய 12 முக்கிய மாவட்டங்களை இணைக்கிறது. பயண நேரத்தை வெகுவாக குறைக்கக் கூடிய இந்த சாலை, மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஷாஜகான்பூருக்கு அருகே 3.2 கிமீ நீளமுள்ள விமான ஓடுதளம் இச்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். இது போர் விமானங்கள் அவசரமாக தரையிறங்குவதற்குப் பயன்படும். இந்த சாலை உபியின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: