வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் சம்பவத்தை அடுத்து அதிபர் டிரம்ப் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நேற்று இரவு நடைபெற்ற வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் வருடாந்திர விருந்து நிகழ்ச்சியில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் உருவானது.
இதையடுத்து பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப், துணை அதிபர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்தச் சம்பவத்தில் அதிபர் உள்ளிட்ட தலைவர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அதிபர் ட்ரம்ப், பாதுகாப்புப் படையினரின் துரிதமான மற்றும் துணிச்சலான நடவடிக்கையைப் பாராட்டியதோடு, “நிகழ்ச்சி தொடரட்டும்” என்று தான் பரிந்துரைத்த போதிலும், பாதுகாப்பு நெறிமுறைகளின்படி அதிகாரிகள் நிகழ்ச்சி நிரலை மாற்றியமைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தற்போதைய சூழலில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த அவர், விரைவில் வெள்ளை மாளிகையில் இருந்து செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாகவும், ரத்து செய்யப்பட்ட இந்த விருந்து நிகழ்ச்சி அடுத்த 30 நாட்களுக்குள் மீண்டும் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
