மாணவர்கள் குறித்து மோடி சர்ச்சை விமர்சனம்: கண்டனம் தெரிவித்து மம்தா பகிரங்க கடிதம்

 

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாணவர்கள் மீதான பாஜகவின் அடக்குமுறை அதிகரித்துள்ளதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் புகழ்பெற்ற ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் நீண்டகாலமாக மாணவர்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் சுதந்திரமான கருத்துக்களுக்காகவும் போராடி வரும் நிலையில், பருய்பூர் பகுதியில் நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் அராஜகம் நிலவுகிறது. அங்கு தேச விரோத கோஷங்கள் எழுப்பப்படுகிறது.

நாட்டின் ஒருமைப்பாட்டை குலைக்கும் ‘துக்டே-துக்டே கேங்’கின் ஆதிக்கம் அங்கு நிலவுகிறது. மாணவர்கள் படிக்காமல் வீதியில் இறங்கி போராடுவதால் பல்கலைக்கழகத்தின் பெருமை சீர்குலைந்துள்ளது’ என்று கூறினார். கல்வி நிலையங்களில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட துடிக்கும் ஒன்றிய பாஜக அரசின் இத்தகைய பேச்சுக்கள், மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் இந்த விமர்சனத்திற்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து பகிரங்க கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ‘ஒன்றிய அரசின் என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடிக்கும் ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்களை அவமதிப்பது வேதனையளிக்கிறது. உண்மையில் அராஜகம் என்பது அதிகாரத்திற்காக புல்டோசர்களை பயன்படுத்துவதும், விவசாயிகளின் குரலை ஒடுக்கி அவர்கள் சாவதற்கு காரணமாக இருப்பதும் தான். பாலியல் பலாத்காரம் செய்தவர்களை அரசியல் லாபத்திற்காக விடுவிப்பதும், மத ரீதியாக நாட்டை பிரிப்பதும், மணிப்பூர் பற்றி எரியும் போது அமைதியாக இருப்பதும் தான் உண்மையான அராஜகம்’ என்று மம்தா சாடினார்.

Related Stories: