புழல்: புழல் அருகே சேதமான சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்குன்றம் சாமியார் மடத்திலிருந்து சென்னை புழல் நோக்கி செல்லும் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் பல இடங்களில் சாலை பழுதடைந்துள்ளது. இதனால், இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், சர்வீஸ் சாலையில் மின் விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் பைக்கில் செல்பவர்கள் நிலை தடுமாறி சாலையில் விழுந்து படுகாயமடைந்து விபத்துகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக புழல் அடுத்த தண்டல் கழனி மற்றும் புழல் மத்திய சிறைச்சாலை எதிரே ஆகிய பகுதிகளில் சாலைகள் படுமோசமாக சேதமடைந்து காணப்படுகிறது.
எனவே, சேதமான சாலையில் உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்தும், மின் விளக்குகள் அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
