தொடக்க நிலை இடையீட்டு மையம் கட்டுமான பணிகள் தீவிரம்

திருப்பூர், பிப்.24:திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்காக  தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்திற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும், சுமார் 2000  வெளிநோயாளியாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சுமார் 1000 உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில், ‘ராஷ்ட்ரிய பால் ஸ்வாஸ்த்யா கார்யாக்ராம்’ திட்டத்தின் கீழ், பிறவி குறைபாடுடைய, 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்காக மாவட்ட ‘தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம்’ தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, சுமார்  1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.இதன் மூலம் மாவட்ட முழுவதும் பிறவி குறைபாடுடைய குழந்தைகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இம்மையத்தில் பிறவி குறைபாடுகளான நரம்பு குழாய் குறைபாடு, டவுன் சின்ட்ரோம், பிளவு உதடு மற்றும் அண்ணப்பிளவு, கோணல்பாதம், இடுப்பு வளர்ச்சி பிறழ்வு, பிறவி கண்புரை, பிறவி காது கேளாமை, பிறவியிலேயே இதய நோய், விழித்திரை முதிரா நிலை நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல், ரத்தசோகை, வைட்டமின், ‘ஏ மற்றும் டி’ குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, அயோடின் குறைபாடு, தோல் வியாதிகள், காது பிரச்னை, ருமாட்டிக் இருதய நோய், அறிவாற்றல் மற்றும் மொழி தாமதம், கற்றலில் குறைபாடு, ஆட்டீசம், மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட பிறவி நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மேல் சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு, கோவை அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுவர் என அரசு மருத்துவமனை பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: