பெரணமல்லூர், பிப்.23: பெரணமல்லூர் அருகே பொதுமக்கள் மயான பாதை வேண்டி கலெக்டரிடம் வைத்த கோரிக்கையை தொடர்ந்து தாசில்தார் நேரில் ஆய்வு செய்தார். பெரணமல்லூர் அடுத்த மேலானூர், மதுரா, ஆவியந்தாங்கல் பகுதியில் சுமார் 500க்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் யாராவது வயோதிகம் காரணமாகவோ, உடல்நலம் பாதிக்கப்பட்டு இறக்க நேரிட்டால் மயானத்திற்கு எடுத்துச் சென்று புதைப்பது வழக்கம். ஆனால் மயானத்துக்கு செல்லும் பாதை உரிய வசதி இன்றி வயல் வெளியில் இறங்கி செல்லும் அவல நிலையில் இப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆவியந்தாங்கல் பகுதிக்கு வந்த கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் பொதுமக்கள் மயானபாதை வசதி குறித்து கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து கலெக்டர் அங்கிருந்த தாசில்தாரிடம் பாதையை ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டு சென்றார். இதனை தொடர்ந்து தாசில்தார் பூங்காவனம், பெரணமல்லூர் பிடிஓ ராஜன்பாபு பொதுமக்களுடன் மயானபாதை செல்லும் வழியினை ஆய்வு செய்தனர்.