சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ள இறுதி வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இறுதியாக 4,613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் வருகிற 23ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30ம் தேதி தொடங்கி கடந்த 6ம் தேதி வரை நடைபெற்றது. அதன்படி, மோத்தம் 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து வேட்புமனுக்களையும் கடந்த 7-ந்தேதி அந்தந்த தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பரிசீலனை செய்தனர்.
இந்த பரிசீலனைக்கு பிறகுதான் எத்தனை வேட்பு மனுக்கள் செல்லத்தக்கவை, எத்தனை வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்ற விவரம் தெரியவந்தது. அதன்படி, 7,599 வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட 5,024 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், எடப்பாடி தொகுதியில் தவெக கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 2,467 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், 108 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 8 மற்றும் 9ம் தேதி காலை 11 மணியில் இருந்து 3 மணிக்குள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 8, 9ம் தேதி தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்களில் 526 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. இறுதியாக தமிழகம் முழுவதும் 4,613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோன்று, சுயேட்சை வேட்பாளர்களுக்கும் சின்னம் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இன்று முதல் வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர், படம், சின்னம் ஒட்டும் பணி தொடங்கியது. தமிழகத்தில் அதிகப்பட்சமாக கரூர் தொகுதியில் 79 பேர் களத்தில் உள்ளனர். அங்கு 108 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், பரிசீலனையின்போது 83 மனுக்கள் ஏற்கப்பட்டது. நேற்று 4 பேர் மனுக்களை வாபஸ் பெற்றதை ெதாடர்ந்து 83 பேர் இறுதியாக களத்தில் உள்ளனர். இதனால், கரூர் தொகுதியில் 5 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. அதேபோன்று, குறைந்தபட்சமாக அம்பாசமுத்திரத்தில் 5 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். அங்கு ஒரு சுயேட்சை வேட்பாளர் கூட இல்லை.
