சென்னை: கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரித்து ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜன நாயகன்’. கடந்த ஜனவரி 9ம் தேதி திரைக்கு வர இருந்த இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் இன்றுவரை வெளியாகாமல் உள்ளது. தணிக்கை வாரியம் சில காட்சிகளை நீக்க அறிவுறுத்தி உள்ளது. அந்த காட்சிகளை நீக்கிய பிறகு சென்சார் வழங்குவதில் தணிக்கை வாரியம் தாமதம் செய்துள்ளது. இதனால் அறிவித்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்பதற்காக பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்றது.
ஆனால் அந்த வழக்கு உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்துக்கு சென்று மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கே வந்தது. பிறகு தயாரிப்பு நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்று படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பியது. சமீபத்தில் தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்கள் படத்தை பார்த்தனர். தற்போது சென்சார் சான்றிதழுக்காக படக்குழு காத்திருக்கிறது. இந்நிலையில், நேற்று ‘ஜன நாயகன்’ படத்தின் முக்கிய காட்சி மற்றும் சில பாடல் காட்சி என 5 நிமிட காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. எப்படி அது கசிந்தது, யார் வெளியிட்டது என்பதற்கான விசாரணை நடந்து வருகிறது. விஜய் தரப்பில் இருந்தே இது ‘லீக்’ ஆகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
