கிருஷ்ணகிரி, ஏப்.9: கிருஷ்ணகிரி அருகே, சென்னப்பள்ளியில் தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி ஒன்றியம் சென்னப்பள்ளி கிராமத்தில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களிடம் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் கலா தலைமை வகித்து பேசுகையில், `சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து, கையெழுத்து இயக்கம், உறுதிமொழி, விழிப்புணர்வு பேரணி, ஒட்டுவில்லைகள், இருசக்கர வாகன பேரணி, கோலப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது,’ என்றார். அதனைத்தொடர்ந்து 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜன், வட்டார ஒருங்கிணைப்பாளர் அருள்மொழி, ஊராட்சி செயலாளர் சரவணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
