கோவை கே.ஜி மருத்துவமனை அருகே சாலையோர தள்ளுவண்டியில் நிலக்கடலை வறுத்து விற்பவர் கடலை பாலன். இவர், பாஜ தீவிர விசுவாசி. நிர்வாக பொறுப்புகளில் இருந்துள்ளார். இந்நிலையில், கடலை பாலன் தனது இரு சிறுநீரகங்கள் பழுதடைந்து உயிருக்கு போராடி வருகிறார். இவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் தெற்கு தொகுதியில் பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசனுக்காக ஓடி, ஓடி உழைத்தவர் என கூறுகிறார். தனது மருத்துவ செலவுக்காக வானதி சீனிவாசனை அணுகியும், இதுவரை அவர் எட்டிக்கூட பார்க்கவில்லை எனவும், ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், உண்மை கட்சி தொண்டன் எனக்கே சிறு உதவி கூட செய்யாத இவர்கள் தொகுதி மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் என்ன செய்துவிட போகிறார்கள் என ஆதங்கத்தை தனியார் யூடியூடிப் சேனலில் வெளிப்படுத்தி இருக்கிறார். வானதியிடம் பல முறை நேரில் சென்று உதவி கேட்ட போது பி.ஏ வருவார் உங்களை பார்ப்பார் என கூறுவார், ஆனால் இதுவரை வரவில்லை. என் வீட்டின் அருகே வானதி பிரசாரம் வந்த போது கூட எட்டிக்கூட பார்க்கவில்லை என கவலை தெரிவித்துள்ளார். இவரது வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது.
