ஊட்டி, பிப்.19: கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நீலகிரி பாதுகாப்பு சங்கம் ஆகியவை சார்பில் பழங்குடியின பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய சத்துணவு வழங்கும் திட்ட துவக்க விழா நடந்தது.
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பங்கேற்று துவக்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது: நீலகிாி மாவட்டத்தில் அதிக அளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் முன்னோடி மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.2 வருடத்திற்கு முன்பு இஸ்பிரவா நிறுவனம் சார்பில் 6 மாதங்களுக்கு சத்தான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இதன்மூலம், 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் எடை அதிகரித்து பயனடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கம் சார்பில் கரிக்கையூர் பகுதியில் உள்ள பழங்குடியின பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சத்தான உணவு பொருட்கள் வழங்க முன்வந்துள்ளனர்.