சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தவெக பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிமனையை இன்று திறந்து வைத்து தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடும் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள். அதிமுகவினர் என்னை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். கோபிசெட்டிபாளையத்தில் தான் வெற்றிவிழா கொண்டாட வேண்டும் என கூட சிலர் பேசினார்கள். அதற்கு மக்கள் நல்ல தீர்ப்பை அளிப்பார்கள்.
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுகவிற்கு சாதகமாக அதிமுகவிலேயே இருந்திருக்க வேண்டும். அவர் பாஜக மாநில தலைமையை ஏற்றதால் 11 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம் தற்போது 5 சதவீதமாக குறைந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதிமுகவில் எல்லோரும் பணம் கட்டுங்கள் வாய்ப்பு தருகிறோம் என்று சொன்னார்கள்.
தற்போது எல்லோருக்கும் திருப்பதி நாமம் கையில் கொடுத்து விட்டார்கள். அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ள ஏ.கே.செல்வராஜ், ‘என்னை தோற்கடிப்பேன். நடுத்தெருவில் நிறுத்துவேன்’, என்று சொன்னார். இப்போது கட்சி தலைமை அவருக்கு சீட்டு வழங்காமல் அவரை நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
