சூலூர், ஏப்.1: கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் ஊரின் முக்கியமான கோயில் இடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கண்ணம்பாளையம் கலங்கல் சாலையில் எல்லை முனியப்பன் கோயில் உள்ளது. கண்ணம்பாளையம் கிராமத்திற்கு 18 ஊர் காவல் தெய்வங்கள் உள்ள நிலையில் எல்லை முனியப்பன் கோயிலில் அனைத்து காரியங்களுக்கும் பூஜை செய்து வட்டத்தின் ஊருக்குள் பணிகள் துவங்குவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முனியப்பன் கோயில் முன்புறமாக இருந்த குதிரை சிலைகளை மர்ம நபர்கள் இடித்து சேதப்படுத்தினர். அப்போது ஊர் பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு எல்லை முனியப்பன் கோயிலை தரைமட்டமாக மர்ம நபர்கள் இடித்துள்ளனர்.
இதற்கு காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட பக்தர்கள் முயன்றனர். தகவல் அறிந்து சம்பவத்திற்கு வந்த சூலூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் சமாதானம் பேசியதை தொடர்ந்து தற்காலிகமாக அனைவரும் கலைந்து சென்றனர்.
