மதுரை, பிப்.18: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் ‘சாம்பல் புதன்’ துவங்கியது. இதனையொட்டி நேற்று அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடந்தன. கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் மிக முக்கியமானதாகும். நேற்று சாம்பல் புதனை ஒட்டி, ஆலயங்களில் கிறிஸ்தவர்களின் நெற்றியில் பாதிரியார்கள், ‘மனம் திரும்பி நற்செய்தியை நம்பு’ என்று சாம்பலால் சிலுவை அடையாளமிட்டனர். தொடர்ந்து 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடைபிடிக்கின்றனர். இந்த தவக்காலத்தில் வெள்ளி கிழமைகள் தோறும் சிலுவைப் பாதை ஜெப வழிபாடுகள், ஆலயங்களுக்கு திருயாத்திரை நடத்தப்படுகிறது. இக்காலத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் தவிர்க்கப்படும். ஆடம்பரங்கள் தவிர்த்து, ஆலயங்களில் வழங்கும் தவக்கால உண்டியல்களில் சேமித்து அதை புனித வியாழன் அன்று ஆலயங்களில் ஏழை எளியோருக்கு காணிக்கையாக வழங்குவர். தவக்காலத்தின் தொடர் நிகழ்வுகளாக குருத்தோலை ஞாயிறு முதல் புனித வியாழன் அன்று பாதம் கழுவும் நிகழ்வு, தொடர்ந்து புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் வரை புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.