×

2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தாய் தற்கொலை

சென்னை, மார்ச் 27: கூடுவாஞ்சேரி அருகே, மாடம்பாக்கத்தில் கிணற்றில் தள்ளி 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம், வள்ளலார் நகர் ராமன் தெருவை சேர்ந்தவர் முருகன் என்ற ஆசிப். இவரது மனைவி சம்சியா (26), மகள் ஆசிபா (10), மகன் அப்சர் (5) ஆகிய மூன்று பேரும், கூடுவாஞ்சேரி ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள தரைமட்ட கிணற்றின் ஓரம் நேற்று காலை 8.30 மணியளவில் உட்கார்ந்திருந்தனர். பின்னர், 2 குழந்தைகளுக்கும் சம்சியா தனது டிபன் பாக்ஸில் எடுத்து வந்த பிஸ்கட்களை ஊட்டியுள்ளார். இதனையடுத்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு 2 குழந்தைகளையும் தூக்கி கிணற்றில் வீசிவிட்டு, சம்சியாவும் கிணற்றில் குதித்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்ததும் மணிமங்கலம் போலீசார் மற்றும் மறைமலைநகர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கிணற்றில் குதித்து இறந்த சம்சியா மற்றும் ஆசிபா ஆகிய இருவரையும் சடலமாக மீட்டனர். பின்னர், ஒரு மணி நேரம் போராடி சிறுவன் அப்சர் உடலையும் மீட்டனர். இதனையடுத்து, 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்சியா எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து சம்சியாவின் உறவினர்கள் கூறுகையில், மாடம்பாக்கத்தில் உள்ள ஒரு அரசியல் பிரமுகரின் மகனுக்கும், சம்சியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இதனை, சம்சியாவின் காதல் கணவரான முருகன் என்ற ஆசிப் கண்டித்துள்ளார். ஆனாலும், மனைவி சம்சியா அரசியல் பிரமுகரின் மகனுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால், மனமுடைந்த ஆசிப், கடந்த வருடம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, அரசியல் பிரமுகரின் மகன் சம்சியாவை கட்டாயப்படுத்தி அவரது குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்னை, பெரம்பூர் அடுத்த கொளத்தூரில் வாடகை வீட்டில் தங்க வைத்துள்ளார்.

இதனை உறவினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர் மகனின் மனைவி ஆகியோர் கண்டித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், சம்சியாவுக்கும், அரசியல் பிரமுகரின் மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்சியா நேற்று முன்தினம் இரவு கொளத்தூரில் இருந்து மாடம்பாக்கத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்துள்ளார். அப்போது, அவர் (அரசியல் பிரமுகரின் மகன்) என்னை நிம்மதியாக வாழ விடவில்லை. இதனால் நான் தினந்தோறும் மனஉளைச்சலில் உள்ளேன் என்று உறவினர்களிடம் கூறினார். இந்நிலையில், நேற்று காலை தனது குழந்தைகளை அழைத்துச் சென்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கதறி அழுதபடி கூறினர்.

Tags : Chennai ,Madambakkam ,Guduvanchery ,Vallalar Nagar, Madambakkam ,Guduvanchery… ,
× RELATED சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி...