×

சின்னம்மா கட்சிக்கு தாவும் ‘இலை’ மாஜி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதியில் 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் எதிர்க்கோட்டை சுப்பிரமணியம் வெற்றிபெற்றார். அதிமுக உடைந்த பிறகு இவர் டிடிவி.தினகரன் பக்கம் சென்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்பிறகு 2019ல் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ராஜவர்மன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2021 சட்டமன்ற தேர்தலில் ராஜவர்மன் மீண்டும் போட்டியிட தீவிர முயற்சி செய்தார். ஆனால் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியுடன் ஏற்பட்ட மோதலால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை.

இதனால் ஏமாற்றமடைந்த ராஜவர்மன், கடைசி நேரத்தில் டிடிவி.தினகரனின் அமமுகவில் சேர்ந்து, சாத்தூர் வேட்பாளராக களமிறங்கினார். தொகுதி முழுவதும் குக்கரும் கையுமாக தீவிர பிரசாரம் செய்தார். தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டாலும், பெருவாரியான வாக்குகளை பிரித்து அதிமுக வேட்பாளர் ஜெயிக்க முடியாமல் தடுத்துவிட்டார். திமுக கூட்டணி சார்பில் களமிறங்கிய மதிமுக வேட்பாளரே வெற்றி பெற முடிந்தது. இதன்பிறகு மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகிய ராஜவர்மன், 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது சாத்தூரில் களமிறங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தீவிரமாக களப்பணியாற்றி வந்தார்.

இவரது கனவில் மண்ணை அள்ளிப்போடும் வகையில் சாத்தூர் தொகுதி இம்முறை பாஜவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிட போவதாக தகவல் பரவி வருகிறது. இதனால் விரக்தியடைந்துள்ள ராஜவர்மன், இந்த முறையும் சீட் கிடைக்காததால், சசிகலா தொடங்கியுள்ள புதிய கட்சியில் இணைந்து சாத்தூர் தொகுதியில் களமிறங்கும் முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2021 தேர்தலில் அதிமுகவில் சீட் கொடுக்காததால், அமமுகவில் இணைந்து ராஜவர்மன் போட்டியிட்டார். அப்போது பெருவாரியான வாக்குகளை பிரித்து அதிமுக வேட்பாளரின் தோல்விக்கு காரணமானார். அதேபோல் மீண்டும் இவர் சசிகலா கட்சியில் இணைந்து போட்டியிட்டால் நயினார் நாகேந்திரனின் தோல்வி நிச்சயம் என்கின்றனர் அதிமுகவினர். எனவே ராஜவர்மனை சரிக்கட்டும் வேலையில் பாஜவினர் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

* குக்கரை கவிழ்க்க தாமரை ரெடி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாங்குடி வெற்றிபெற்றார். அந்த தேர்தலில் மாங்குடி 75,954 வாக்குகளும், அதிமுக கூட்டணியில் பாஜ சார்பில் போட்டியிட்ட எச்.ராஜா, 54,365 வாக்குகள், அமமுக தேர்போகிபாண்டி 44,864 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 23,872 வாக்குகள் பெற்றனர். தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு காரைக்குடியை ஒதுக்கும் பட்சத்தில் மாங்குடி எம்எல்ஏ மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாதக சார்பில் அக்கட்சியில் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட உள்ளார்.

அதிமுக-பாஜ கூட்டணியில் காரைக்குடி அமமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் அமமுக சார்பில் காரைக்குடி தொகுதியில் தனித்து நின்று கணிசமாக வாக்குகள் வாங்கினர். தற்போது அதிமுக கூட்டணியும் உள்ளதால் அமமுகவினர் குதூகலமாக உள்ளனர். அமமுக சார்பில் மீண்டும் தேர்போகி பாண்டி போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் வந்த டிடிவி தினகரன் நிச்சயம் தேர்போகி பாண்டிக்கு தான் சீட் என கூட்டத்திலேயே உறுதியாக கூறினார். இதனால் அமமுகவினர் உற்சாகமாக பணியை துவக்கிவிட்டனர். ஆனால் தொகுதி கிடைக்கும் என இலவு காத்த கிளியாக இருந்த பாஜ நிர்வாகிகள் விரக்தியடைந்துள்ளனர். நீண்டகாலமாக கூட்டணியில் உள்ள தங்களுக்கு தொகுதியை ஒதுக்காமல், புதிதாக வந்த அமமுகவிற்கு ஒதுக்கியது தவறு, தேர்தலில் அமமுகவிற்கு கட்டாயம் பாடம் புகட்டுவோம் என பாஜவினர் சபதம் எடுத்துள்ளனர்.

* தேர்தல் கவுண்டவுன் வாக்கு பதிவுக்கு 29 நாட்கள்
தலைவர்கள் இன்று…
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை
எடப்பாடி பழனிசாமி
(அதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
செல்வப்பெருந்தகை
(காங்கிரஸ் மாநில தலைவர்) சென்னை
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
நயினார் நாகேந்திரன் (பாஜ தலைவர்) சென்னை
பெ.சண்முகம்
(சி.பி.எம்.மாநில செயலாளர்) சென்னை
மு.வீரபாண்டியன்
(சி.பி.ஐ.மாநில செயலாளர்) சென்னை
திருமாவளவன்
(வி.சி.க தலைவர்) சென்னை
பிரேமலதா
(தேமுதிக பொதுச்செயலாளர்) சென்னை
அன்புமணி
(பாமக தலைவர்) சென்னை
ஜி.கே.வாசன்
(தமாகா தலைவர்) சென்னை
சீமான்
(நாதக ஒருங்கிணைப்பாளர்) சேலம்
டி.டி.வி.தினகரன்
(அமமுக பொதுச்செயலாளர்) சென்னை
விஜய் (தவெக தலைவர்) பனையூர்

Tags : Leaf ,Chinnamma ,Subramaniam ,2016 assembly elections ,Sattur ,Virudhunagar district ,AIADMK ,TTV Dinakaran ,Rajavarman ,
× RELATED 28 தொகுதிகளை அடையாளம் காண...