வத்திராயிருப்பு, பிப். 12: தை அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பௌர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். தை அமாவாசையையொட்டி கடந்த 9ம் தேதி முதல் கோயிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இன்று வரை கோயிலுக்கு செல்லலாம். நேற்று தை அமாவாசை என்பதால் அதிகாலை 3 மணி முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் பக்தர்கள் குவிந்தனர். சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய ஊர்களில் ஏராளமானோர் கார், வேன், டூவீலர் போன்ற வாகனங்களில் வந்தனர்.