சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.28.25 கோடி செலவில் 3 முடிவுற்ற பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்: முரசொலி மாறன் பூங்கா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நாணயம் நினைவுத் தூண் திறப்பு

 

சென்னை: சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.28.25 கோடி செலவில் 3 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். முரசொலி மாறன் பூங்கா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நாணயம் நினைவுத் தூணும் திறக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 28.25 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட முரசொலி மாறன் பூங்கா, கலைஞர் நூற்றாண்டு நாணயம் நினைவுத் தூண், முதல்வர் படைப்பகம், நவீன நூலகம் மற்றும் கொளத்தூர் நவீன அங்காடி ஆகியவற்றை திறந்து வைத்தார். பெரம்பூர் நெடுஞ்சாலையில் ரூ.4.20 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட முரசொலி மாறன் பூங்கா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நாணயம் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது.

முரசொலி மாறன் பூங்காவானது, பொலிவூட்டப்பட்ட நுழைவாயில், இசை நீரூற்று, பார்வையாளர் இருக்கை வசதியுடன் கூடிய சறுக்கு வளையம், நீண்ட நடைபாதை, நிழலாடிய நடைபாதை வசதிகள், தோட்டங்கள் மற்றும் கூரையுடன் கூடிய திறந்தவெளி அமைப்புகள், யோகா மையம், 2 எண்ணிக்கையிலான பேட்மிண்டன் கோர்ட், சிறுவர்களுக்கான உடற்பயிற்சி உபகரணங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன விளையாட்டுப் பகுதி, 8 வடிவ நடைபாதை, 25 எண்ணிக்கையிலான கண்காணிப்பு கேமரா வசதிகள், பொது அறிவிப்பு கருவி, உயர் விளக்கு கம்பம், 20 நபர்கள் அமரும் வகையில் இருக்கைகள், முதியோர்களுக்கென பிரத்யோக உடற்பயிற்சி உபகரணங்கள், பசுமை புல்வெளிகள், 35 வகையான தோட்ட மரங்கள் மற்றும் தாவரங்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கென நவீன கழிப்பறை வசதிகள் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஜவகர் நகரில் முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகமானது 4,127 சதுர அடி நிலப் பரப்பளவில் 4,831 சதுர அடி கட்டடப் பரப்பளவில் 4.75 கோடி செலவில் தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ளது.

இக்கட்டடத்தின் தரை தளத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தும் வசதிகள். வரவேற்பு அறை, குழந்தைகள் படிக்கும் இடம், அலமாரிகள், மின் தூக்கி வசதிகள், ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிக்கென நவீன கழிப்பறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. முதல் தளத்தில் போட்டித் தேர்வு ஆராய்ச்சி பகுதி, கணினிப் பிரிவு, நூலகர் அறை, படிக்கும் பகுதி, அலமாரிகள், மின் தூக்கி வசதிகள் மற்றும் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிக்கென நவீன கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

பேப்பர் மில்ஸ் சாலையில் கொளத்தூர் நவீன அங்காடியானது 31,785 சதுர அடி நிலப்பரப்பளவில் 61,230 சதுர அடி கட்டடப் பரப்பளவில் 19.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த அங்காடியின் அடித்தளத்தில், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் வசதிகள், 2 சரக்கு மின் தூக்கி வசதிகள், 22 கடைகள், 2 நிர்வாக அறை, மின்சார அறை, காரிடார் வசதிகள் மற்றும் 3 ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன கழிப்பறை வசதிகள், முதல் தளத்தில் 29 கடைகள், மின்சார அறை மற்றும் 3 ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன கழிப்பறை வசதிகள், இரண்டாம் தளத்தில் 23 கடைகள், மின்சார அறை, 3 ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

* ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 3,200 பேருக்கு நலத்திட்ட உதவி

சென்னை கொளத்தூர் பல்லவன் சாலையிலுள்ள டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 3,200 முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் டேலி பயின்ற, 53 மாணவிகள் மற்றும் 32 மாணவர்களுக்கு மடிக்கணினிகள், சான்றிதழ்களையும், தையல் பயிற்சி முடித்த 320 மகளிர்களுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழ்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி வாழ்த்தினார்.

கலைஞர் கண் மருத்துவமனையில் கண் பரிசோதனை செய்து கொண்ட 200 நபர்களுக்கு கண் கண்ணாடிகள் மற்றும் புத்தாடைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, ஆர்.கிரிராஜன், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப.ரங்கநாதன், மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் தலைமை நிர்வாகிகள் நரேந்திரன், ஹெலன், பெரியார் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் கே. ஹேமலதா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: