செய்யாறு, பிப்.10: செய்யாறு அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டில் நள்ளிரவில் 2 வாலிபர்கள் திடீரென புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளது. நேற்று அதிகாலை 2 மணியளவில் 3வது மாடியில் உள்ள குழந்தைகள் சிறப்பு வார்டில் மர்ம ஆசாமிகள் 2 பேர் திடீரென புகுந்தனர். அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர் இதனை கவனித்தனர். அந்த நபர்களை குழந்தை திருடர்கள் என நினைத்து கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அருகில் உள்ள மற்ற வார்டுகளில் இருந்த பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து, மருத்துவமனையில் பணியில் இருந்த நர்ஸ் பிரியா உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், அங்கு விரைந்து வந்த செய்யாறு போலீசார் அவர்கள் 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.