போச்சம்பள்ளி, பிப்.10: போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 400 பேரை போலீசார் கைது செய்தனர். தெலுங்கானா, புதுச்சேரி மாநிலத்தில் வழங்கியதைபோல், மாற்றுத்திறனாளிகளுக்கு மாத பராமரிப்பு தொகை ₹3 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும், அதிக பாதிப்பிற்குள்ளாக மாற்று திறனாளிகளுக்கு ₹5 ஆயிரம் உயர்த்தி வழங்கிட வேண்டும். தனியார் துறைகளில் 5 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். அண்ணாமலை, கோடீஸ்வரன், பிரபாகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட செயலாளர் பெரியசாமி போராட்டம் குறித்து பேசினார், வெண்ணிலா, செந்தாமரை, செல்வி, பல்ராமன், ராஜா, செல்வராஜ், செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போச்சம்பள்ளி இன்ஸ் பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் 39 பெண்கள் உள்ளிட்ட 85 பேரை கைது செய்தனர்.