சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியின்போது காளைகள் முட்டியதில் 3 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பார்வையாளர்களை காளைகள் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் மற்றும் பொங்கல் சமயங்களில் நடைபெறும் மஞ்சுவிரட்டு (வடமாடு ஜல்லிக்கட்டு) உலகப்புகழ் பெற்றதாகும். சேவுகப்பெருமாள் கோயில் திடல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறும் இந்தத் திருவிழாவில் நூற்றுக்கணக்கான காளைகள் சீறிப்பாய்ந்துபல ஆயிரக்கணக்கான மக்களால் கண்டுகளிக்கப்படுகின்றன. இது இப்பகுதியின் பாரம்பரிய வீர விளையாட்டாகும்.
இன்று நடைபெற்ற அரளிப்பாறையில் பாலதண்டாயுதபாணி கோயில் விழாவை ஒட்டி நடந்த மஞ்சுவிரட்டில் 500 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அரளிப்பாறை பகுதியில் அரசு அனுமதியுடன் மஞ்சுவிரட்டு நடந்த நிலையில் முன்னதாக வயல்வெளிகளில் உரிமையாளர்கள் காளைகளை ஆங்காங்கே அவிழ்த்துவிட்டனர். காளைகள் முட்டியதில் ராமநாதன் (23), சுந்தரராஜ்(48), ராஜஸ்தானைச் சேர்ந்த ஜமுலால் லால்ஜி(45) உயிரிழந்தனர்.
