சென்னை: சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் அப்துல் சமது, குணங்குடி அனிபா, மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் புழல் ஷேக் முஹம்மதுஅலி, அப்துல் சலாம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஜவாஹிருல்லா பேசியதாவது: ஈரான் நாட்டின் சுப்ரீம் லீடர் என்று வர்ணிக்கப்படக்கூடிய ஆயதுல்லா அலி காமேனி இன்றைக்கு அமெரிக்கா கொன்றிருக்கலாம். அந்த அமெரிக்காவிற்கு ஒரு துணையாக இருந்த அரபு நாடுகளையும் உலக மக்கள் மறக்க மாட்டார்கள். இந்த நேரத்திலே நமது நாடு இந்திய அரசு என்ன செய்ய வேண்டும்? இப்படியான ஒரு பயங்கரவாதத் திட்டத்தை இஸ்ரேல் தீட்டி இருக்கக்கூடிய நேரத்திலே, அமெரிக்கா தீட்டி இருக்கக்கூடிய நேரத்திலே, அமெரிக்காவினுடைய கூட்டாளிக்கு இஸ்ரேலுக்கு நமது நாட்டினுடைய பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்.
நரேந்திர மோடி எதற்காகச் செல்கிறார்? இந்திய நாட்டின் நலனுக்காகச் செல்கிறாரா? இந்திய நாட்டினுடைய வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காகச் செல்கிறாரா என்றால் நிச்சயமாக இல்லை. பயங்கரவாதி இஸ்ரேல் மக்களினாலேயே பலரால் எதிர்க்கப்படக்கூடிய நெதன்யாகுவிற்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக காந்தி காட்சியினுடைய காந்தி தேசத்தினுடைய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்குப் போகிறார். நெதன்யாகு தேர்தலிலே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒரு நாலந்தர அரசியல்வாதியாக நரேந்திர மோடி இங்கே இஸ்ரேலுக்குச் சென்றிருக்கிறார் என்பதை நிச்சயமாக நாம் வன்மையாக கண்டிப்பதற்கு கடமைப்பட்டிருக்கின்றோம். சர்வாதிகாரம் என்றைக்கும் நிலைத்ததில்லை. சர்வாதிகாரம் வீழும், சர்வாதிகாரம் வீழும். இவ்வாறு அவர் பேசினார்.
