மன்னார்குடியில் நடந்த நான் முதல்வன் திட்டத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 222 பேருக்கு பணி ஆணை வழங்கல்

மன்னார்குடி : மன்னார்குடியில் நடந்த நான் முதல்வன் திட்டத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 222 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் நான் முதல்வன் திட்டம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

கல்லூரி நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் லெப் ராஜன் வரவேற்றார். இம் முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து 25 முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. முகாமில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு கேட்டு விண்ணப்பங்கள் அளித்தனர். அதில் 222 பெயர்கள் உடனடியாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

முகாமில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசுகையில், தமிழக முதல்வர் கல்வி வளர்ச்சிக்கு அதிலும் குறிப்பாக பெண் கல்வி வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். திறன் வாய்ந்தவர்களை கண்டறிந்து அவர்களை மேலும் மெழுகு ஏற்றி அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அவர்களை கொண்டு செல்லும் வேலைகளில் முதலமைச்சர் ஈடுபட்டுள்ளார். மாணவர்கள் கல்வியுடன் சேர்த்து திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் ஈடுபட்டதன் பலனாக இன்றைக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

நான் முதல்வன் திட்டம் மாணவர்களின் தனித் திறனை உயர்த்தி அவர்களை நேரடியாக வேலை வாய்ப்புகளில் இணைக்கும் முக்கிய திட்டமாக உள்ளது. எனவே அரசு ஏற்படுத்திக் கொடுக்கும் பல்வேறு வாய்ப்புகளை இளைய சமூகத்தினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், திருவாரூர் மாவட்ட நான் முதல்வன் திட்ட பாரதிதாசன் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் நிருபன், துறை தலைவர்கள் இல.பொம்மி, ராமு, சிவச்செல்வன், நேதாஜி கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் தில்லை நடராஜன் நன்றி கூறினார்.

Related Stories: