கூடுவாஞ்சேரி: விவசாய நிலத்தில் தண்ணீர் ஏற்றிக்கொண்டிருந்த டேங்கர் லாரி மீது பார்சல் ஆட்டோ மோதியதில் டிரைவர் பரிதாபமாக பலியானார். இதனால் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம் அடுத்த சேலையூர் விஓசி தெருவை சேர்ந்தவர் சட்டநாதன். இவரது மகன் கார்த்திக் (28). தனியார் நிறுவனத்தில் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார். இவர், இன்று காலை வழக்கம்போல் ஆட்டோவில் பார்சல் ஏற்றிக்கொண்டு வாலாஜாபாத்தில் இருந்து வண்டலூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, வண்டலூரில் உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் ஏற்றிக்கொண்டிருந்த டேங்கர் லாரி மீது ஆட்டோ பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார்த்திக் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் ஓட்டேரி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கிய கார்த்திக் உடலை 1 மணி நேரம் போராடி மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
