ஊட்டி,பிப். 5:ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலக்கொலா, இத்தலார் ஊராட்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.52 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியம், பாலக்கொலா, இத்தலார் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சாரபில் ரூ.52 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலக்கொலா ஊராட்சிக்குட்பட்ட மாசிகண்டி பகுதியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.5.43 லட்சம் மதிப்பில் வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படும் திட்டம் முடிக்கப்பட்டுள்ளது. கேர்கண்டி பகுதியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.5.27 லட்சம் மதிப்பில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. தரைமட்ட நீர் தேக்க தொட்டி மற்றும் வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.