சென்னை: தேர்தல் ஆணையம் பதிவு பட்டியலிலிருந்து நீக்கியதை எதிர்த்து மனித நேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் பதிவு பட்டியலில் நீக்கம் செய்ததற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து 6 ஆண்டுகள் போட்டியிடாதது, செலவு கணக்கை தாக்கல் செய்யாதது உள்ளிட்ட விதிகளை மீறியதற்காக நாடு முழுவதும் 474 பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பதிவை பட்டியலில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் நீக்கம் செய்தது. இவற்றில் தமிழகத்தில் உள்ள 42 அரசியல் கட்சிகளும் அடங்கும்.
தமிழகத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட 42 கட்சிகளின் பதிவுகள் நீக்கப்பட்டன.
பதிவு நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்,மனிதநேய ஜனநாயக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். வஸ்தவா, நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனிதநேய மக்கள் கட்சியை சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். கட்சிகளின் பதிவுகளை நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் அரசியலமைப்பு சட்டம் அந்த அதிகாரத்தை வழங்கவில்லை.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. தேர்தல் ஆணையர்கள் இந்த முடிவை எடுக்கவில்லை. நடந்து முடிந்த தேர்தல்களில் இந்த கட்சிகள் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து தேர்தலில் பங்கேற்றன. கட்சிகளின் அங்கீகாரத்தை வேண்டுமானால் தேர்தல் ஆணையம் ரத்து செய்ய முடியும். பதிவு நீக்கத்தை ரத்து செய்ய முடியாது என வாதிட்டனர். தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், தொடர்ந்து ஆறு ஆண்டுகள் போட்டியிடவில்லை. செலவு கணக்குகளை தாக்கல் செய்யவில்லை. அதனால், பதிவு நீக்கம் செய்யப்பட்டது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளனர். உத்தரவில், பதிவு நீக்கம் செய்யப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று தெரிவித்து வழக்கின் இறுதி விசாரணையை மார்ச் 2 வது வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
