ஊட்டி, பிப். 16: நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையால் அதனை அனுபவிக்க தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் காணப்படுகிறது.
இந்நிலையில் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில் ஊட்டி வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. வார இறுதி நாட்களிலும் வழக்கத்தைவிட கூட்டம் குறைவாகவே உள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அதே சமயம் நகருக்கு வெளியில் உள்ள சூட்டிங் மட்டம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் ஓரளவிற்கு கூட்டம் காணப்பட்டது.
